முனைவர் ச. மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி) ரஹ்மத் நகர்,
திருநெல்வேலி - 627 011.
திருநெல்வேலி - 627 011.
முன்னுரை
“தகுதி உள்ளதே தப்பிப் பிழைக்கும்“ என்ற அறிவியல் அறிஞர் டார்வீனின் விலங்கியல் கோட்பாட்டின்படி,
மனிதன் தப்பிப் பிழைப்பதன் காரணம், காலத்துக்கேற்பத் தன்னை மாற்றி நவீனமயமாக்கித் தற்காத்துக் கொண்டதுதான். பல்லாயிரம் ஆண்டு இலக்கிய, இலக்கண வரலாறு பெற்றது தமிழ். “உலக நாடுகளின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ, கிரேக்கம், எபிரேயம், இலத்தீன், சீனம், அரபு ஆகிய மொழிகளோடு தமிழையும் செவ்வியல் மொழியாக ஏற்று அதன் தொன்மை, வரி வடிவம் ஆகியவற்றை ஆராய முற்பட்டது”1 என அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா குறிப்பிடுகிறார். தொன்மையும் உண்மையும் மென்மையும் கொண்ட தமிழ் கணினி யுகத்தில் புதுயுகத் தமிழாக உருப்பெற்று வரும் இக்காலத்தில் மாற்றமடையாத எதுவும் இந்த உலகில் தப்பிப் பிழைப்பது இல்லை. ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் தமிழ்மொழியிலும்,
தமிழிலக்கியத்திலும்,
எதிர்காலத்தில் நடைபெற வேண்டும் என்பதை முன்னிறுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.
எழுத்துச் சீர்திருத்தம்
26
எழுத்துகளைக் கொண்டு எளிமையாய் அமையும் ஆங்கிலமொழி போல், தமிழ் எழுத்துகள் சீர்த்திருத்தப்பட்டு தமிழின் வரிவடிவம் எளிமைப்படுத்தப்பட வேண்டும். “இன்று
247 தமிழ் எழுத்துகளையும் கணினிப் பயன்பாட்டில் 107 குறியீடுகளைக் கொண்டு எழுதுகிறோம்“2
என மலைக்கிறார் அறிவியல் தமிழ் அறிஞர் முனைவர் வா.செ.
குழந்தைசாமி. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத பிற நாட்டவரும் எளிமையாய் தமிழ் படிக்க எதிர்கால எழுத்துச் சீர்திருத்தம் அமையும். கணினியை இன்னும் எளிமையாகப் பயன்படுத்த வாய்ப்பாக அமையும். டிஸ்கி,
டாப்,
டாம்,
யூனிகோடு எனும் நால்வகை எழுத்துருவாக்கத்தினை உலகத்தமிழர்கள் கணினியில் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொருவரும் வெவ்வேறு எழுத்துருவாக்கத்தினைப் பயன்படுத்துவதால்,
சில இணையப் பக்கங்களை நம்மால் வாசிக்க முடியாமல் போகிறது. உலகம் முழுக்க “யூனிகோடு“
முறையைத்தான் மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.
தமிழ்க்கணினிகள் யாவற்றிலும் விதவிதமான உள்ளிடல்கள் நிறுத்தப்பட்டு,
எதிர்காலத்தில் ஒரேமாதிரியான உள்ளிடல்கள் செயல்படுத்தப்பட வேண்டும். “எந்த எழுத்துரு இருந்தாலும் யூனிகோடுக்கு அதை மாற்றும் எந்திரம் கண்டறியப்பட வேண்டும்“ 3 என்ற அறிவியல் தமிழறிஞர் சுஜாதாவின் கருத்து நோக்கத்துக்கது. அதோடு அவர் கூறும் மற்றொரு கருத்து “இணையத்தில் கோப்புகளை அனுப்ப இன்று 26 முறைகள் உள்ளன. 4 விசைப்பலகை ஒதுக்கீடு உள்ளன. ஒரே ஒரு விசைப்பலகை ஒதுக்கீடு,
ஒரே ஒரு குறியீடு என்பது எதிர்காலத்தில் பாமர மக்களுக்கும் கொண்டு செல்ல உதவும்“3 என்பதாக அமைகிறது.
கணினித் தொழில்நுட்பத்திற்கு இணையாக செல்பேசித் தொழில்நுட்பம் வந்தபின் தமிழ்எழுத்துகளின் பயன்பாடும் இணையத்தேடலும் அதிகரித்துள்ளது.
குரல்வழிப் புரிதல்களோடு இணையத்தின் தட்டச்சுப் பொறிகள் இயங்கத்தொடங்கியுள்ளன. கையளவு செல்பேசியில் 247 தமிழ் எழுத்துகளையும் தருவது என்பது இயலாத செயல். எனவே எழுத்துச் சுருக்கம் எதிர்காலத் தேவை. உலகம் முழுக்க ஒருங்குறிப் பயன்பாடு வரும்நிலையில் தமிழகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு எழுத்துருவைப் பயன்படுத்துதல் சரியாக இருக்க இயலாது. காகிதமில்லா மின்னனு நூல்கள் இன்று கிண்டில் போன்ற தளங்களில் நேரடியாக வெளியிடப்படும் நிலையில் உலகளாவிய ஒருங்குறிப் பயன்பாட்டுக்குள் தமிழ் முழுமையாகத் தன்னை உட்படுத்திக்கொள்ளும்.
பேச்சு வழக்கு பற்றிய ஆய்வுகள்
இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள் நடைபெற்ற அளவுக்கு, வட்டாரப்பேச்சு வழக்கு பற்றிய ஆய்வுகள் நடைபெறவில்லை. திருநெல்வேலித் தமிழுக்கும்,
சென்னைத் தமிழுக்குமான ஒப்பியல் ஆய்வுகள், வட்டார வழக்குச் சொல்லகராதி தொடர்பான ஆய்வுகள் தமிழகத்திற்குள் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் நடத்தப்பட்டு இணையத்தில் அந்தந்த மக்களின் குரலில் பதிவாக்கப்படவேண்டும்.
கல்வெட்டுப்பதிவுகள் இணையத்தில் ஆவணமாக்கப்பட வேண்டும்
ஆய்வறிஞர் திரு. ஐராவதம் திரு. மகாதேவன்,
நாகசாமி போன்றோரின் கல்வெட்டாய்வுகளைப் போன்று பல்கலைக்கழகங்கள் தங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரிய கல்வெட்டுகளைப் படங்களாக எடுத்து, இணையத்தில் ஆவணமாக்கினால் உலகளாவிய அளவில் ஆய்வுகளை நிகழ்த்தலாம்.
“2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய கல்வெட்டுகள் இந்தியாவில் உள்ளன. அதில்
90% தமிழ்நாட்டில் உள்ளன. திருநெல்வேலி மாவட்டம் மறுகால் தலையில் அதிக செய்திகளைக் கூறும் கல்வெட்டு உள்ளது”.
திருக்குறள் உலக இலக்கியமாய் அறிவிக்கப்பட வேண்டும்
உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலக இலக்கியமாய் ஐ.நா. சபை மூலம் அறிவிக்க வைப்பதும்,
உலகின் அனைத்து மக்களுக்கும் அவரவர் மொழியில் திருக்குறளைக் கொண்டு செல்ல வேண்டும்.
கணினித்தமிழ் - இணையத்தமிழ்
தமிழ் மட்டுமே அறிந்த ஒருவர் எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் மென்பொருட்கள் உருவாக்கப்படவேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழகம் ‘ஷ்ஷ்ஷ்.tணீனீவீறீஸ்u.ஷீக்ஷீரீ எனும் வலைத்தள முகவரியில் இட்டு, அழகான மின்நூலகத்தை அமைத்து, இணையக் கல்வியை 54 நாடுகளிலுள்ள 5000 தமிழ் மாணவர்களுக்கு அளித்து வருகிறது. இணையத்தமிழை முதுநிலைப் பாடமாக்கி, கணினியோடு இணைந்தகல்வி உருவாக்கப்பட வேண்டும்.
புதிய நோக்கில் தமிழ் ஆய்வுகள்
உலகில் தமிழியற்புலங்கள் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக நூலகங்களும் இணையம் வழியே தொடர் இணைவு செய்யப்பட்டால்,
“மின்னணு நூலகம் உருவாக்கப்பட்டு ஆய்வுகள் சிறப்பாக நடைபெறும். அனைத்துப் பல்கலைக்கழக ஆய்வு நூலடைவுகளும் இணையத்தில் இடப்படுவதன் மூலம், திரும்பத் திரும்ப ஒரே துறையில் நடைபெறும் ஆய்வுகள் குறையும்.
புதிய நோக்கில் தமிழ் இலக்கியம் பயிலலாம்
தமிழ் இலக்கியப் படைப்புக்களின் நோக்கும் போக்கும் எதிர்காலத்தில் மாற்றம் பெறும். இயந்திர யுகத்தில் கவிதை, சிறுகதை,
உரை நடை இன்னும் சொற்சுருக்கம் பெறும்; மண்மரபு சார்ந்த பதிவுகள், ஏழைமக்களின் அவலங்களே இனி கவிதை முழுக்க இடம் பிடிக்கும். தமிழ்க் கவிதைகள் மொழிபெயர்ப்பின் மூலம் உலகத்தின் பார்வைக்குள்ளாகி நோபல் பரிசுகளும் பெறவாய்ப்பாகும்.
சிறுகதைகளின் வடிவம் இன்னும் சுருங்கும்.
புதிய பாடுபொருட்களால் நாளைய இளம் படைப்பாளிகள் புதுமைப்பித்தனையும், கு.ப.
ரர்வையும்,
மௌனியையும்,
சரியாக உள்வாங்க முயல்வார்கள் தமிழ் வகுப்பறைகளில் மாணவர்களே, படைப்பாளிகளாகவும் திறனாய்வாளர்களாகவும் திகழ்வார்கள்.
தமிழ்மொழி,
ஆய்வகங்கள் மூலம் இன்னும் நவீன உத்திகளோடு ஒலி வடிவிலும்,
ஒளி வடிவிலும் கற்றுத்தரப்படவேண்டும்.
தமிழ்இணையக் கல்விக்கழகம் தகவலாற்றுப் படை எனும் அறிய இணையப் பதிவைத் தந்துள்ளது. சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை அனைத்து இலக்கிய வகைமையும் மறுவாசிப்பிற்குள்ளாகி இன்னும் ஆழமாகப் புரியப்படலாம்.
தமிழ்த்துறை - வணிகம், பொருளாதாரம், மானுடவியல், இயற்பியல்,
புவியியல்,
வானியல்,
மண்ணியல் போன்ற பல்துறைகளோடு இணைந்த பல்துறையாக மாறி அதிலிருந்து புதிய துறைகள் உருவாகலாம்.
உ.வே.சா. அழிந்து கொண்டிருந்த நூல்களைத் தேடிப்பிடித்து பல ஓலைச்சுவடிகளை ஒப்பு நோக்கிப் பாடபேதம் கண்டு அடிக்குறிப்போடு பல இலக்கியங்களை அச்சிட்டு வெளியிட்டார்.
அதன்பின் சுவடிகளை ஒப்புநோக்கி ஆய்தல் குறைந்து போனது. எதிர்காலத்தில் இந்நிலை மாறவேண்டும். ஓலைச்சுவடிகள் யாவற்றையும்
“ஸ்கேன்“
செய்து இணையத்தளத்தில் உலகம் முழுக்க உள்ளிடும் பணி நடந்தால் உலகளாவிய முன்முயற்சியாக அது அமையும்.
புதிய இலக்கியங்களின் மூல எழுத்துப்படி ஒவ்வொன்றும் இம்முறையில் ஆவணப்படுத்தப்பட்டால் எதிர்கால ஆய்வுகளுக்கு வழிகாட்டியாய் அமையும். படைப்பாளிகளின் வாழ்வியல் பதிவுகள் அவர்கள் வாழும்போதே செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டால், அவை அவர்களின் படைப்பில் வெளிப்பட்ட முறையை நம்மால் அறியமுடியும். எதிர்காலத்தில் வெளியாகும் அனைத்துப் படைப்புக்களோடும் அந்தப் படைப்பு பிறந்த சூழல் குறித்த “குறுந்தகட்டு ஒலிப்பதிவுடன் இணைந்து வெளியானால் வாசனால் படைப்பை முழுமையாய் உணர முடியும். நாளைய பல்கலைக்கழகத்துறைகளில் பேராசிரியர்களோடு படைப்பாளிகளும் இணைந்து பணிபுரிவார்கள்.
கரிசல் காட்டு எழுத்தாளர் கி. ரா. புதுவைப் பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்தியதைப் போன்ற சூழல் எங்கும் நிலவும்.
தமிழின் எழுச்சிக்காலம்
எதிர்காலம் தமிழின் எழுச்சிக்காலமாய் அமையும். சொந்த மண்ணில் அந்நியப்படுத்தப்பட்ட மொழியாக இனி தமிழை யாரும் நினைக்க முடியாது போகும். தமிழ் ஆட்சிமொழியாக அனைத்துத்துறைகளிலும் திறம்படச்செயல்படும். புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இணையான தமிழ் உணர்வு தமிழகத்திலும் உருவாகும். தமிழ் நவீன ஊடகமான இணையத்திலும் சாதனை படைத்து உலகத்தோரால் பாராட்டப்பெறும். பேச்சுத்தமிழுக்கு இலக்கணம் வகுக்கப்படலாம், வேலைவாய்ப்புத் தரும் துறையாக மலரும். தொன்மையின் வேரில் தமிழ் எனும் கற்பகதரு நவீன கனிகளைத்தரும்.
மொழிபெயர்ப்புகள் நிறைய நடைபெற்று “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்“. நம் தேர்ந்த பண்பாடும்,
திராவிட நாகரிகமும் உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப் பெற்று பின்பற்றப்படும். தனித்தியங்கும் தன்மை தமிழனுக்கு உண்டு. தமிழே ஞாலத்தில் முதுமொழி பண்டு என்ற பாவேந்தர் கூற்று அப்போது மெய்ப்பிக்கப்படும்.
நவீனத் தமிழ் வகுப்பறைகள்
தேமதுரத் தமிழோசை இணையமெலாம் ஒலித்திடும், புது யுகத்தில் தமிழ் கற்பித்தலும் கற்றலும் உருமாறுவது தவிர்க்க முடியாது. தொலைக்காட்சிப் பெட்டி இன்று எவ்வாறு மனித சமுதாயத்தை ஆட்டிப் படைக்கிறதோ அதேபோல் இணைய ஊடகமும் ஆட்டிப் படைக்கத் தொடங்கி உள்ளது. தட்டச்சுப் பலகை மூலம் தேடு பொறிகளுக்குக் கட்டளை இட்டால் விரல் நுனியில் மலைபோல் தரவுகளைத் தொகுத்து அளிக்கும் நிலையில், வகுப்பறை வாசித்தல்களும்,
அருஞ்சொற்பொருள் விளக்கங்களும், பொழிப்புரை, பதவுரை கூறுதலும் நாளை பொருளற்றுப் போகக்கூடும். அப்போது வரும் மாணாக்கர் கூட்டம் மிதமிஞ்சிய அறிவுக் களஞ்சியமாகத் திகழக் கூடும். ஓர் ஆசிரியர் உலகின் ஒரு கோடி இணைய மாணவர்களுக்கு ஒரே சமயத்தில் வகுப்பெடுக்கக் கூடும்.
தமிழியல் நாளை.....?
1. “தமிழ் மொழியாம் தாய்மொழியைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பயின்று விடலாம்“ என்ற கொடுமையான நிலை மாற வேண்டும். தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி, தொழிற்கல்வி, மருத்துவக் கல்வி என்று எந்தக் கல்வியாக இருந்தாலும் தமிழ் பயில்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். ஒரே தமிழாக இல்லாமல், அந்தந்தத் துறைகளுக்கேற்ற பயன்படு தமிழாக அக்கல்வி வடிவமைக்கப்பட வேண்டும்.
2. கல்லூரிகளில் பகுதி - 1 என்று தமிழ் இருந்தாலும்,
அந்த மதிப்பெண்கள் பட்டம் வழங்கும் போது தர மதிப்பீடுகளுக்கு எடுக்கப்படாததால், மாணவர்களுக்கு அது இளைப்பாறும் வகுப்பாகவே உள்ளன. இந்நிலை எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்பட்டு,
அந்த மதிப்பெண்களும் தர மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.
3. கற்றலையும் தேர்வு எழுதுதலையும் மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொள்ளாமல், மாணவர்களைப் படைப்பாளிகளாக்கும் வகையில் நவீன முறையில் தமிழ்ப்பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
4. வகுப்பறை சார்ந்துமட்டும் அமையாமல் பண்பாடு, மக்கள் வாழ்வியல் சார்ந்த கள ஆய்வுகள், பங்கேற்றல் அனுபவங்களைத் தரும் வகையில் பாடங்கள் அமைதல் வேண்டும்.
5. பி.ஏ.(தமிழ்), எம்.ஏ (தமிழ்) போன்ற இலக்கியம் சார்ந்த பாடங்களோடு இணையப் பயன்பாட்டுத்தமிழ்,
மக்கள் தொடர்பு ஊடகத் தமிழ், கலைச்சொல் உருவாக்கத்தமிழ்,
இதழியல்மொழிசார்ந்த தமிழ் போன்றவற்றைத் தற்போதுள்ள நிலையைவிட இன்னும் மேம்பட்ட நிலையில் அளித்தால் தமிழ் கற்போர் ஆர்வம் மேம்படும்.
6. சங்க இலக்கியங்களைப் பொருள் சொல்லி விளக்குவதோடன்றி, நவீனத் துறைகளான அழகியல், அமைப்பியல், உளவியல், சமூகவியல் போன்றவற்றின் அடித்தளத்தோடு நவீனக் கோட்பாட்டு முறையில் இன்னும் சிறப்பாக நடத்தலாம்.
7. பல்கலைக்கழகங்களில் உரைநடைக்கான,
கவிதைகளுக்கான,
சிறுகதைகளுக்கான,
புதினங்களுக்கான,
கடிதஇலக்கியங்களுக்கான தனித்தனித் துறைகள் ஏற்படுத்தப்பட்டு நவீனக் கோட்பாட்டு ஆய்வுகள் பயன் மிகுந்த முறையில் நிகழ்த்தப்பட வேண்டும்.
8. இளநிலை படிக்கும் மாணவ மாணவியரைக் கள ஆய்வில் ஈடுபடவைத்து, அந்தந்த வட்டாரம் சார்ந்த வட்டார வழக்குச் சொல் அகராதிகளைத் தொகுத்து இணையத்தில் அவற்றை சேமிக்க வகை செய்ய வேண்டும். பிங்கல நிகண்டு, திவாகர நிகண்டு என்று நாம் அறிந்தவற்றின் அடிப்படையில் சொற்கள் வகை தொகை செய்யப்பட வேண்டும்.
9. அயற்புலம் சார் தமிழர்களை முன்நிறுத்திப் பல்கலைக்கழகங்களில் புலம்பெயர் தமிழ்ப் படைப்பாளர்களின் படைப்பிலக்கியங்களுக்காகத் தனித்துறைகளை அமைக்கப் பெற்று, அவர்களின் நேரடி அனுபவங்களைப் பெற்று அவ்விலக்கியங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
தமிழ் இணையத் துறை
ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் இணையத் தமிழுக்கென ஒரு தனித்துறை உருவாக்கப்பட வேண்டும். எல்லாக் கல்லூரி மாணவர்களுக்கும் கணினிப் பயிற்சி அளிப்பதோடு, ஒவ்வொரு மாணவனுக்கும் குறிப்பிட்ட பக்கவரையறை மின்னணு வடிவத்தில் தமிழ்ப் படைப்பிலக்கியங்கள் அனைத்தையும் இணையத்தில் சென்று சேர்க்க ஆவன செய்ய வேண்டும். சில இணைய அன்பர்கள் இத்தொண்டினை எவ்விதப் பலனும் பாராமல் தற்போது செய்து வருகிறார்கள்.
சங்க இலக்கியமும், நீதி நூல்களும்,
பக்தி இலக்கியங்களும், சிற்றிலக்கியங்களும், நவீன படைப்பிலக்கியங்களும் இணையப்பக்கங்களில் சேமிக்கப்படும்போது கற்பித்தல் எளிமையாகிறது.
ஒலி சார்ந்து கற்பித்தல்
தமிழ் இலக்கியத்தைக் கற்றுத்தருவது இன்றைய சூழ்நிலையில் எழுத்துக்களைச் சார்ந்தும்,
சொற்களைச் சார்ந்தும் அமைகிறது. தமிழ் இலக்கியங்களை ஒலிசார்ந்து கற்றுத் தருவதற்காக ஒவ்வொரு கல்லூரியிலும் “மொழி ஆய்வகம்“
ஏற்படுத்தப்பட்டுத் தமிழின் நுட்பமான தனித்துவம் எதிர்காலத்திலும் நிறுவப்பட வேண்டும். லகர, ளகர, ழகர வேறுபாடுகள் சார்ந்த இனிமை போன்றவற்றை மொழிஆய்வகம் மூலம் எதிர்காலத்தில் மிக நுட்பமாகக் கற்றுத்தரலாம்.
சுவடிகள் பாதுகாப்பு
பள்ளி,
கல்லூரித் தமிழாசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவ மாணவியரைக் கொண்டு அவரவர்ப் பகுதியில் கிடைக்கும் அரிய ஓலை சுவடிகளைத் தேடி எடுத்துப் பாடம் செய்து பல்கலைக்கழகங்கள் மூலம் பதிப்பிக்க வேண்டும். உ.வே.சா. செய்த உன்னதமான பணியை இன்று தமிழ்ப்பேராசிரியர்கள் செய்வது காலத்தின் கட்டாயம். அச்சுவடிகள் கணினி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டுக் குறுந்தகட்டில் பத்திரப்படுத்தப்பட்டால் நாளைய தலைமுறை அவற்றை ஆராய முடியும். கண்டுபிடிக்கப்படாத சுவடிகளில் தமிழின் நாட்டார் பாடல்கள், சிற்றிலக்கியங்கள்,
சங்க இலக்கியச் செய்யுள்கள் இன்னும் பல தமிழகத்தின் கிராம, நகரப் பகுதிகளில் இருட்டறைகளில் மறைந்து கிடக்கின்றன. அவற்றை எடுத்துப் பத்திரப்படுத்தி எதிர்கால ஊடகங்கள் மூலம் அடுத்த தலைமுறைக்குத் தர வேண்டும்.
கல்வெட்டுப் பதிவுகள்
தமிழ்,
எழுத்துகளோடு மட்டும் தொடர்புடைய மொழியன்று. பண்பாட்டோடு தொடர்புடைய மொழி. உலகின் முதல் மனிதன் தோன்றியதாகக் கருதப்படும் லெமூரியாக் கண்டத்தை ஆழ்கடல் ஆய்வுக்கு உட்படுத்தும் முயற்சி வரும்காலத்தில் முக்கியமானதாகக் கருத வேண்டும். திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஸ்ரீ வைகுண்டம் பகுதி சார்ந்த ஆதிச்ச நல்லூரில் முதுமக்கள்தாழிகள் கிடைத்துப் பல திருப்பங்களை உண்டாக்கியது.
எதிர்காலங்களில் தமிழ் மாணவர்களுக்குத் தொல்லியல், மானுடவியல் அணுகுமுறைகள் வெவ்வேறு முறைகளில் கற்றுத் தரப்பட்டுத் தொல்லியல் சான்றுகளை ஆராயும் தன்மையைத் தர வேண்டும்.
கல்வெட்டு எழுத்துகளைக் கணினி மூலம் பட முறையால் விளக்கி அப்படிப்பைத் தமிழ் மாணவர்களுக்குக் கட்டாயமாக்க வேண்டும். மாதம் ஒரு முறை மாணவர்களைக் கல்வெட்டு தொடர்பான கள ஆய்வுகளுக்கு அனுப்புவதன் மூலம் அரிய கல்வெட்டுகளை நம்மால் அறிந்து பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குத் தர முடியும்.
முடிவுரை
மொழி நவீனமாகும் போது, பண்பாடு எழுச்சி அடைகிறது. தமிழ் என்றால் இனிமை என்பதோடு, இனி அனைத்தும் உள்ளடக்கிய நவீனப் புதுமை என்ற பொருள் புனையப்படட்டும்.
கல்தோன்றி மண் தோன்றிய கதையைச் சொல்லி மட்டுமே எதிர்காலத்தில் காலம் தள்ளவிட முடியாது. காகிதமில்லாப் புத்தகங்களிலும், தமிழ் நவீன மின்னணு அங்கியோடு இணைய ஆட்சி செய்யும். அன்று கணினி முன் எல்லாரும் கம்பராமாயணத்தைப் படக் காட்சிகளோடு ஒலி, வரி வடிவில் கற்பார்கள். அன்று வீடுகளே வகுப்பறையாகும்.
காசிநகர்ப் புலவன் பேசும் உரைதனைக் கனடாத் தமிழன் நேரடி இணைப்பில் நிறைவாகப் படிப்பான். கற்போரெல்லாம் கவிதை எழுதுவர்: மாணாக்கர் மனிதம் பேணுவர். கலாநிதி கைலாசபதி போன்று, ரசிகமணி போன்று, நா. வானமாமலை, வையாபுரிப் பிள்ளை போன்று புதிய நோக்கிலும் போக்கிலும் தமிழ் மாணவன் வீறு கொண்டு எழுவான். எதிர்காலத்தில் தமிழ்த் துறையின் துணையாக ஆயிரமாயிரம் புதிய துறைகள் புலரும். இலக்கணக் குறிப்பு கற்பது மட்டுமே தமிழ்க்கல்வி என்ற நிலை மாறி, இணையப் பூங்குன்றனார்கள் “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என்று புதிய பூபாளம் இசைப்பர். அன்று உலகத் தமிழரெல்லாம் நவயுகத்தமிழைத் தமிழ் விடு தூது விட்டுப் போற்றி மகிழ்வர்.
“ஓங்கலிடை வந்(து) உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத்(து)
இருளகற்றும்
- ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று)
ஏனையது
தன்னேர் இலாத தமிழ்“
தமிழால் இன்றும், என்றும் நவீனமாக நவயுகம் படைக்க முடியும். எதிர்காலத்தில் உலக மொழிகளெல்லாம் தமிழின் தனிச்சிறப்பை மொழிபெயர்த்துத்தரும்.
அடிக்குறிப்புகள்
1. மணவை முஸ்தபா, தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்,
ப.33
2. வா.செ. குழந்தைசாமி, தமிழில் எழுத்துச்சீர்திருத்தம்,
ப.56
3. சுஜாதா,கற்றதும் பெற்றதும்,
ப.37
பயன்பட்ட நூல்கள்
கற்றதும் பெற்றதும், விகடன் பிரசுரம்,சென்னை
பாரதியின் அறிவியல் பார்வை, பாரதி பதிப்பகம்,சென்னை
Arumai
பதிலளிநீக்கு