திங்கள், 18 டிசம்பர், 2017

தமிழ் இனி..... உயர்ந்து ஒளிரும், மிளிரும்

முனைவர் கே.எஸ் பிரணதார்த்திஹரன்
தலைவர், இந்தித்துறை (ஓய்வு)
தூய வளனார் தன்னாட்சி கல்லூரி
திருச்சிராப்பள்ளி & -620 002, தமிழ்நாடு
அலைபேசி &- 9047553875

                மனிதனின் நாகரிகம் மொழி எனவும்மொழியின் நாகரிகம் இலக்கியம் எனவும் பேராசிரியர் மு. வரதராசன் அவர்களால் பகரப்பட்டு உள்ளது. தமிழ் மொழியின் மேன்மையினைப் பல கவிஞர்கள் அழகாகப் பதிவு செய்து உள்ளனர். ‘மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம், முத்தமிழ் எங்கள் உயிர் கொண்டோம்’, எனக் கவியரசர் கண்ணதாசனும்உன்சீர் இளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துவதாகவும் மனோன்மணிய ஆசிரியர் சுந்தரனார் பதிவு செய்யும் வேளையில், காலத்தின் மாற்றத்திற்கேற்ப மொழியில் மாற்றம் நிகழ்வது தவிர்க்க இயலாது என்கிற கருத்தானது, ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல காலவகையினானேஎன்கிற கூற்றின் மூலம் உணரலாம். சங்கம் வளர்த்த செந்தமிழ், திருக்குறள், ஐம்பெருங்காப்பியங்கள், கம்பராமாயணம் கண்ட ஒண்டமிழ், நாயன்மார்கள், ஆழ்வார்கள் பக்தியில் திளைத்த பைந்தமிழ், கிறித்தவர்கள், முகம்மதியர்களால் ஆளுமைபெற்ற வளர்தமிழ் .வே.சாமிநாதய்யர் முயற்சியால் ஓலைச்சுவடிகளிலிருந்து காகிதத்திற்குப் புத்துயிர் பெற்றுப் புத்துணர்ச்சியுடன் ஏறு போல் பீடு நடை போட்டு வருகிறது.

                இக்காலக்கட்டத்தில் விஞ்ஞானத்தின் தாக்கம் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டு இருப்பது போல் மொழிகளிலும் தமிழ் மொழியிலும் ஏற்படுத்தி இருப்பது தவிர்க்க இயலாத ஒன்றாகும். பாரதியார் தெரிவு செய்தபடி -

                'மெல்லத் தமிழினிச் சாகும்-வந்த
                மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
                என்றந்தப் பேதை உரைத்தான்-’’1

                என்கிற வரிகளை நோக்குமிடத்து தமிழ் மொழி புதுப் பொலிவுடன் இனி விளங்க, மகாகவி பாரதியார் அறியவித்தபடி,

'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
                தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புது நூல்கள்
                தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்’’2
என உணர்ந்து,
'தேமதுரத் தமிழ்ழோசை உலகமெலாம்
                பரவும் வகை செய்தல் வேண்டும்’’3


இனி,
                'திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
                மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்’’4
                எனப் பாரதிதாசன் சங்கநாதம் செய்யும் வேளையில்,
                'கங்கையைப் போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊரும் உள்ளம்’’5

                கொண்ட தமிழ் உள்ளங்கள் இணையம், மொழிபெயர்ப்புத்துறை மற்றும் இலக்கிய ஒப்பாய்வுகளில், குறிப்பாக அனைத்து இந்திய, மேனாட்டுத் தரமானப் படைப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். மொழிபெயர்ப்பு மேற்கொள்வதற்கு அகராதிகள் பெரிதும் துணை புரிகின்றன. தமிழ் அகராதிகள் பெரும்பாலும் மெத்தப்படித்த பண்டிதர்களாலும் வல்லுநர்களாலும் தயாரிக்கப்படுகின்றன

இக்காலக் கட்டத்தில் இப்பரந்த பாரததேசத்தில் பிறமாநிலங்களைச் சார்ந்த உயர் அதிகாரிகள் தமிழகத்திலும், தமிழ்நாட்டைச் சார்ந்த உயர் அதிகாரிகள் பிறமாநிலங்களிலும் கடமை ஆற்றுவது இயல்பு. சான்றாக, இந்திய நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயம் சார்ந்த கருத்தரங்குகளில் பங்கு கொள்ள வரும் பிற மாநிலங்களைச் சார்ந்த விவசாயத் துறை சார்ந்த வல்லுநர்கள் வாட்ர் என்கிற ஆங்கிலச் சொல்லிற்குத் தமிழில் பெரும்பாலும் தண்ணீர் என்கிற பதத்தினைப் பயன்படுத்தும் வேளையில், அந்த அகராதியில், வல்லுநர்கள் வைத்து இருக்கும் கையேட்டில், புனல், தீர்த்தம், நீர் போன்ற இலக்கியத் தரம் வாய்ந்த அர்த்தங்கள் இடம் பெற்று இருப்பதால் அந்த அதிகாரிகளால் சாமானிய ஏழை விவசாயிகளுடன் எளிதில் உரையாட உறவாட இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது

எனவே, காலத்தின் அருமை உணர்ந்து, தமிழ்மொழியைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமைப்படுத்த வேண்டும். எனவே, அகராதி தயாரிக்கும் பொழுது சாமானிய மக்களின் கருத்துக்களையும் சொற்களையும் கையேடுகளிலும், அகராதிகளிலும் அதிகம் பயன்படுத்த வேண்டும்.

                ஊடகங்களில், தமிழ் மொழிபெயர்ப்பானது ஆங்கிலத்தின் தாக்கம் கொண்டதாகத் திகழ்கிறது. சான்றாக, அஞ்சப்படுகிறது என்கிற சொல்லானது () என்பதன் தமிழ் மொழியாக்கமாகும். ஆங்கிலமொழியின் தன்மையானது செயப்பாட்டு வினை மூலம் தெளிவுபடுத்தும் தன்மை கொண்டது. இந்திய மொழிகளின் தன்மையானது செய்வினை மூலம்  தெளிவுபடுத்தும் தன்மை கொண்டதாக உள்ளதால் ஊடகங்களில் சொற்கள் சாதாரண பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் அமைந்தால் தமிழின் வளர்ச்சி உன்னத நிலையை அடையும் என்பதில் ஐயமில்லை.

  மேலும், ஊடகங்களில் நடுவண்அரசு சிறார்கள் போன்ற தூய தமிழ்ச் சொற்களுக்குப் பதிலாக மத்திய அரசு குழந்தைகள் போன்ற சொற்களைக் கையாளலாம். மேலும், சுப்பிரமணிய பாரதியார் அவர்கள், 'தமிழ்மொழியைத் தெய்வம் எனவும் அதை வணங்கிப் படிக்க வேண்டும் எனவும் கட்டளை செய்வது போன்று சொல்லி இருக்கிறார். எல்லாக் கலைகளையும் தமிழில் இனிமையாகவும். தெளிவாகவும் எளிமையாகவும் சொல்லமுடியும் என்கிற உயர் நம்பிக்கை பாரதியிடம் இருந்தது”.6 

எதிர்காலத் தமிழ் இனிச் சிறப்பாக இளமையுடன் விளங்க வேண்டுமேயானால் முழுமுயற்சியுடன் பிறமொழி பயிற்சி பெற்று பாரதி கண்ட கனவை நனவாக்கத் தமிழ் உள்ளங்கள் இணையத்தளம் ஒப்பாய்வு மற்றும் மொழிபெயர்ப்புத் துறைகளில் முழு மூச்சுடன் முயல வேண்டும். மேலும், பாரதி முக்காலமும் உணர்ந்த ஞானி என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 'அவரின் கனவு எட்டாத தூரத்தில் இருப்பது போல் தோன்றினாலும், சாத்தியம் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. அவரின் தேன் மதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்தல்வேண்டும்அவ்வாறு செய்யத் துணிந்து முயற்சித்தால் தமிழ் உள்ளங்கள் எதிர்காலத்தில் வெற்றிவாகை சூடும் நல்ல வாய்ப்பு உள்ளது. 'சிறுவர் சிறுமிகளுக்குப் புதியன விரும்பு என்று புதுமையான கருத்தினை மழைத்துளியாய் அள்ளித் தெளித்தவர் நம் பாரதி’’8  தாய்மொழி கண் போன்றது, பிற மொழிகள் கண்ணாடி போன்றவை.

                பிற மொழிகளின் இலக்கியங்களின் மேன்மையினை உணரும் தமிழ் உள்ளம் பாவேந்தன் பாரதிதாசன் பகர்ந்தபடி, அறிவை விரிவு செய்து அகண்டமாக்கி விசாலப் பார்வையினால் மக்களை விழுங்கும் தன்மையினைப் பெறலாம். சாகித்ய அகாடமி மற்றும் தென்னிந்திய இந்திப் பிரச்சார சபை போன்ற நிறுவனங்கள் ஒப்பாய்விற்கும் மொழி பெயர்ப்பிற்கும் பெரிதும் துணைபுரிகின்றன. சுதந்திர இந்தியாவில் இலக்கியத்தினைப் பொறுத்தவரைத் தமிழ் மொழியின் தொடர்பானது ஆங்கிலத்தில் மட்டும் ஒரு குறிப்பிட்ட வரையறையில் உள்ளதால் இலக்கியத்தினைப் பொறுத்தவரை பல துறைகளில் வளர்ச்சி பெறும் சூழலில் உள்ளது

மலையாளம், தெலுங்கு, இந்தி, வங்கம், மராட்டி போன்ற மொழிகளின் தொடர்பானது, ஆங்கிலத்துடன் வடமொழி, உருது, தமிழ், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளுடன் இருப்பதால், அம்மொழிகளில் ஒப்பாய்வு, மொழிபெயர்ப்புத்துறைகளில் நிறைய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன. அம்மொழிகளில் பல தரமான ஞானபீடப் படைப்புகள் வெளிவந்துள்ளன. அம்மொழிகளில் பல பெண் எழுத்தாளர்களும் பெண்கள், தலித் சார்ந்த இலக்கியங்களும் தமிழைக்காட்டிலும் நிறையவே காணப்படுகின்றன. தமிழ் மொழியில், அகிலன், ஜெயகாந்தன் ஆகியோர் மட்டுமே ஞானபீடப் பரிசு பெற்று உள்ளனர்.

                எழுத்தாளர் ஜெயகாந்தன் பதிவு செய்த கருத்து யாதெனில், எந்தவொரு மோசமான மொழிபெயர்ப்பும் அம்மொழியில் உள்ள படைப்பு பற்றியும் படைப்பாளனைப்பற்றியும் தெரிவுபடுத்துகிறது என்பதாகும். விஞ்ஞான யுகம் என்று இக்காலக் கட்டத்தினைக் கூறுவதுபோல் மொழிபெயர்ப்பு யுகம் என்று கூறினால் அது மிகையானது. ஏனெனில், வால்மீகிக்கு ஆங்கிலம் தெரியாது. ஷேக்ஸ்பியருக்குத் தமிழ் தெரியாது. கம்பனுக்குப் பிரெஞ்சு தெரியாது. இருப்பினும், மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் காரணத்தினால் அவர்களது படைப்புகள் மக்களிடையே இன்றும் நிலைத்து வாழ்கின்றன. இணையம், மொழிபெயர்ப்பு மற்றும் ஒப்பாய்வு மூலம் தமிழ் இனி..... உயர்ந்து ஒளிரும், மிளிரும்.

கருவி நூற்பட்டியல்
வரிசை            ஆசிரியர்        நூல்    பக்க எண்
எண்
1.            மகாகவி பாரதி         பாரதியார் கவிதைகள், கங்கை 42
                                சி.சுப்பிரமண்ய புத்தக நிலையம்,
                                13 தீனதயாளு தெரு, தி.நகர்,
                                சென்னை- & 17                                                                                           நான்காம் பதிப்பு மார்ச், 2003
2.            மேலது            மேலது            43
3.            மேலது            மேலது            43
4.            தொகுப்பாசிரியர்    பாரதிதாசன் பாடல்கள்     91
                கல்பனாதாசன்         பாவை, பப்ளிகேஷன்ஸ்                
                                142,  ஜானி ஜான்கான்சாலை,                                      
                                இராயப்பேட்டை, சென்னை- & 14                                                             5.            மேலது            மேலது                                92
6.            முனைவர்    பாரதியார் இனி ஒரு            105
                கலைவேந்தன்         விதி செய்வோம்
                                தமிழ் ஐயா வெளியீட்டகம்,
                                ஔவை கோட்டம்
                                திருவையாறு- & 613204
                                முதற்பதிப்பு, சூலை, 2017                                
7.            மேலது            மேலது                            110
8.            மேலது            மேலது                            331








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக